Monday, November 24, 2008

கல்லறைகளுடன் ஒரு நாள்!

காவல் தெய்வங்களின் கோவில்
உறங்கும் தெய்வங்கள்
அது 2002ம் ஆண்டு மாவீரர் நாளின் முதல்நாள். 26ந் திகதி. நாம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கிறோம். அன்று அங்கு ஒரு சில அலுவலகப் பணிகளுக்காகச் சிலர் அழைக்கப்பட்டோம். அந்த வருடம்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ஏன்? நிறையப்பேருக்கு தெரியும். நிறையப்பேருக்கு தெரியாது. ஆம். 1995ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டை கைப்பற்ற, மக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற மிலேச்சத்தனமான இராணுவம் கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை 'புல்டோசர்' போட்டு இடித்து தரைமட்டமாக்கியது. இந்த குரூர செயலை உலகத்தில் உள்ள வேறு எந்த இராணுவமும் செய்யாது.
இடித்து உடைக்கப்பட்ட கல்லறைகளின் துகள்கள்!

பின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இருண்டகாலத்தின் பின் முதற்தடவையாக நடைபெற்ற மாவீரர் நாள். நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. 1995ம் ஆண்டுக்கு முன்னர் இந்த துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், போராளிகள் என அனைவரும் திரண்டனர்.

தமது செல்வங்களின் விதைகுழிகள் எங்கே என அவர்கள் தேடாமல் இருக்க நாம் வழிகாட்டினோம். அவர்களுக்கு தெரியும். தமது பிள்ளை எங்கே உறங்குகிறான் என. ஆனா அரக்க இராணுவம் எல்லாவற்றையும் அழித்ததால் மீண்டும் புனரமைக்கப்பட்டதால் அவர்களுக்கு சற்றே குழப்பம்.

கண்களில் நீர் சொரிய சொரிய தேடுவார்கள். விசும்பும் அவர்கள் குரல் கேட்டு நெஞ்சு வெடிக்கும். கல்லறையை கண்ட உடன் கட்டியணைத்து குமுறி அழுவார்கள். என்ன ஆறுதல் சொல்ல முடியும். தேசவிடுதலை, மாவீரர் என என்ன சொன்னாலும் பத்துமாதம் சுமந்த தாய்க்குதானே தெரியும் அதன் பிரிவு வலி. வார்த்தைகளால் வடிக்க முடியாத சோகம். ஒரு கல்லறையை நிலைத்து பார்த்தால் எமக்கு தொண்டை அடைக்கும். கண்களில் நீர் எட்டிப்பார்க்கும்.

பெற்றவர்கள் கல்லறைகளுக்கு மாலைகள் போடுவார்கள். பூக்கள் சொரிவார்கள். தம் மணியான செல்வங்களுக்கு உணவு கொண்டு வந்து படைப்பார்கள். சந்தணக்குச்சிகளை கொழுத்தி, மெழுகுதிரி, நெய்விளக்கு என்பவற்றை ஏற்றி வழிபடுவார்கள். கண்களில் இருந்து சொரியும் நீரைப் பார்த்து வருணதேவனும் பொறுக்காமல் மழையாய் பொழிந்து அழுவான். அது எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. குடும்பமாய் அமர்ந்து கண்ணீரால் அர்ச்சிப்பார்கள்.


அடுத்தநாள்(27ந் திகதி) தான் மாவீரர் தினம் என்றாலும் முதல்நாளே அவர்களின் அஞ்சலிகள் தொடங்கிவிடும். காலையில் இருந்து மாலைவரை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது கல்லறைகளுக்கு அருகே இருப்பார்கள்.

வீடு திரும்பும் போது அவர்கள் முகத்தில் சோகம் இழையோடும். எவருடனும் கதைக்க மாட்டார்கள். நெஞ்சு முழுவதும் கண்மணிகளின் கனத்த நினைவு.

சிறிய குழந்தைகள் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும். மிகவும் மனதைப்பிழியும் நினைவு அது. தமது பிள்ளைகளின் கல்லறை அங்கே இல்லை என்றவுடன் அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது. குழறி குழறி அழுவார்கள். மீண்டும் புனரமைக்கப்பட்ட துயிலும் இல்லம் என்பதால் அந்த தினத்துக்குள் முழுக்கல்லறைகளும் மீண்டும் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அன்று கல்லறைகள் இல்லாத பெற்றோர்கள் மண்களில் வீழ்ந்து புரண்டு அழுதனர். எவராலும் அவர்களை தேற்றமுடியவில்லை. அப்படியான் பெற்றோர்களுக்கு தூயிலும் இல்ல பொறுப்பாளரால் 27ந் திகதி 'நினைவுச்சுடர்' ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.

இவற்றைத்தவிர அங்கே தொண்டர்களாலும் போராளிகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தென்னங்கன்றுகள் ஒவ்வொரு கல்லறைக்கும் அருகே வைக்கப்பட்டன. மிக மிக அற்புதமான முயற்சி. மாவீரர் நாள் முடிவுற்றதும் அவர்கள் வீடு செல்லும் போது தென்னங்கன்றுகளை தம்மோடு எடுத்து சென்று அந்த பிள்ளையின் நினைவாக தமது வளவிலே நாட்டுவார்கள். அந்த தென்னம்பிள்ளையை தமது பிள்ளையாக பாவனை செய்து வளர்ர்ப்பார்கள். கல்லறைகளுக்கு முன்னாலே சுடர் ஏற்றுவதற்காக ஒரு கம்பியிலே சிறிய தாளியை பொருத்தி, அதற்குள்ளே தேங்காய் கொப்புறாக்கள், திரி, கற்பூரம், ஒரு நெருப்புபெட்டி என்பவற்றை பொலித்தீன் துனியாலே மூடி கட்டுவார்கள். இது ஒவ்வொரு கல்லறைகளுக்கு முன்னாலும் இருக்கும். கல்லறை இல்லாத பெற்றோர்களுக்கு இப்படியான சுடரை கல்லறைகள் அமையப் போகும் இடத்தில் வைப்பார்கள்.

துயிலும் இல்ல வளாகம் எங்கும் மின் விளக்குகள் வண்ண ஒளி வீசும். ஒலி பெருக்கிகளில் மாவீரர் நினைவு கானங்கள் காற்றினூடே கல்லறை தழுவும் கானமாய் இதய்த்தை வருடும்.

அன்றைய தினம் தலைவனின் பிறந்த தினம் காலையில் உற்சாகமாக இருந்தவர்கள் எல்லாம், துயிலும் இல்லம் வந்த உடன் இறுக்கமாகி போவார்கள். கல்நெஞ்சனையும் கசியவைக்கும் அற்புதமான இடம். கண்ணீரால் நனைந்து நனைந்து துயிலும் இல்லம் எப்பொழுதும் ஈரலிப்பாகவெ இருக்கிறது போன்ற ஒரு பிரமை.

நாளை மாவீரர் நாள். தலைவன் உரை. உச்ச நாளிகை என மாலை நேரம் நம் மனதைப் பிழியப்போகிறது. இந்த எண்ணத்துடன் எல்லோரும் வீடு திரும்பினர்.

மாவீரர் வாரத்தில் இசைப்பிரியன் இசையில் உருவான ஒரு பாடல் இங்கே.


மிக அற்புதமான இசையமைப்பாளர் இசைப்பிரியன். இந்தப்பாடல் "கல்லறை தழுவும் கானங்கள்" என்ற ஒலிப்பேழையில் இடம்பெற்றது. எஸ்.ஜி.சாந்தன் மற்றும் வசீகரன் ஆகியோரின் குரலில் அற்புதமாக அமைந்த பாடல். இந்தப்பாடல் மட்டுமல்ல இந்த ஒலிப்பேழையில் வரும் எல்லாப்பாடல்களும் அற்புதமானவை. காலநீரோட்டத்தில் அவைகள் இந்த வலைப்பூவினூடே உங்களை தழுவும்.

இந்தப்பாடல் வரிகள் காசி ஆனந்தனுக்கு சொந்தம். குரல் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சொந்தம். அற்புதமான பாடல். மகோன்னதமான வரிகள்.


காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை
-காலத்தால்....

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை
-தீபங்கள்....
-காலத்தால்....

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன்
-குண்டுமழை....
-காலத்தால்....

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இளவேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ
விலை தந்து மாவீரராய் நிமிர்ந்தார்
-இலையுதிர்....
-காலத்தால்....

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா
-மாற்றார்....
-காலத்தால்....

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்
-தமிழீழ....
-காலத்தால்....

0 comments: