Sunday, December 14, 2008

அரண்டு நிற்கிறோம்...அரசியல் பண்டிதனை இழந்து...


பாலா அண்ணை உங்கள்
பயணம் முடிந்ததாமே?
அப்போ,
தமிழீழ தேரின் அரசியல்
அச்சாணியும் அறுந்திருக்கும்.
ஒட்டலாமா?
புதிதாய் ஒன்று போடலாமா?
எதுவாயினும்
உங்கள் போல் வருமா?
பாருங்கள்!
பாரில் தமிழரை -அரசியல்
பண்டிதனை இழந்து
பரிதவித்து நிற்கிறார்கள்.
தம்பி தம்பி என்று -எங்கள்
தலைவனை தாங்கிய செம்மல் நீங்கள்
இன்று
ஏங்கித் தவித்து நிற்கிறான்
எங்கள் தலைவன்.
ஆறுதலா? ஆலோசனையா? அஞ்சற்க
என்று
அரவணைத்தவர் நீங்கள்.
இன்று
அரண்டு நிற்கிறார்கள்.
திம்பு முதல் ஜெனீவா வரை
கம்பு போல் நின்று
சிங்களத் தலைமைக்கு சொல்
அம்புகள் சொருகியவர் நீங்கள்.
என்நோயினும் கொடியது
தமிழர் வாழ்வு - என்று
உங்களையே எங்களுக்காய் ஒப்புவித்தவர்.
குறுந்தாடியும் குறும்புப் பேச்சும்
கவனமாய் கருத்தெடுத்து
நறுக்கென உதிர்க்கும் நச்சென்ற பதில்கள்
நாமினி எங்கு காண்போம்.
இறுதி நேரத்திலும்
இன்முகத்துடன்தான் இருந்தீர்களாம்.
எமக்கு தெரியும்
பக்கத்தில் நின்றவர்க்கு - நாலு
பகிடிகள் விட்டடிருப்பீர்கள்.
தலைவன் உரைக்கு உங்கள்
தனித்துவ விளக்கம் அலாதியானது.
'அம்மா' விற்கு விட்ட கடிகள்,
'அன்ரி' யை பார்த்து சீண்டல்கள்,
'அண்ணா'வின் காதல் கடிதங்கள்,
அப்பப்பா.......
ஆரய்யா எமக்கினிச் சொல்வர்
அத்தனை அழகாய்!
இயக்கப் பேச்சுகளிலே - உங்கள்
பேச்சுக்குத்தானே கரகோஷம் எழும்.
அண்ணா!
வாழும் போது நோயால்
அல்லலுற்றீர் - அதைமறந்து
அரவணைத்ததீர் எம்மை.
இனிநாம் அகத்திருத்தி - உம்மை
அடிவணங்குகிறோம்.
"மதியுரைஞர்" நீங்கள் உரைத்ததெல்லாம்
மனதிற்குள் மணியாய் ஒலித்திருக்கும்.
நீர் தந்த 'விடுதலை'யும்
நெடுதூரம் நடந்த 'போரும் சமாதானமும்'
காலம் முழுதும் எம்மை
நினைக்கச் செய்யும் உம்மை.

(பாலா அண்ணை இறந்த அன்றிரவு இப்படி கிறுக்கினேன். முன்னரும் இதில் பதிவிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் ஆண்டு நினைவில் மீண்டும்......)