Friday, September 26, 2008

தங்கமேனியை சாவு தின்றதே.......!


ஈழமெங்கும் இன்று சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டிருக்கும். ஒலிபெருக்கி எல்லாம் வாணி ஜெயராமின் "நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்" பாடல் ஒலிக்கும். எல்லா வீடுகளின் முன்பாகவும் சிவப்பு மஞ்சள் கொடி கட்டி திலிபனின் நினைவுப்படத்திற்கு மாலை போடப்பட்டு மலர்கள் தூவப்பட்டிருக்கும். மக்கள் முகங்கள் இறுக்கமாக இருக்கும்.

ஆம் இன்றைக்கு 21ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இந்தியா எம்மை கழுத்தறுத்தது திலீபனின் உயிரைப்பறித்து. ஒரு துளி நீரும் இன்றி தவம் கிடந்தான் தேரடி வீதியிலே. அவனோடு சேர்ந்து அவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் உன்னத மக்களும், அவனை உயிராய் மதிக்கும் மக்களும் வெயில்,மழை பாராது வேலவனின் வெள்ளை மணல் மீது காத்திருந்தனர். உப்புச்சத்தியாக்கிரகம் இருந்து வெள்ளையர்களிடம் மதிப்பு பெற்ற காந்தி வாழ்ந்த தேசம், இவனோ துளி நீர் கூட இல்லாமல் இருக்கிறான். இது அவர்களுக்கு கௌரவப் பிரச்சினை. எப்படியும் எம் தீலீபனை எம்மிடம் தருவார்கள் என்ற நம்பிக்கை 12நாள் இருந்தது. பின்னர்தான் தெரிந்தது. கயவர் நெஞ்சம். வல்ல திலீபனை வஞ்சனையால் விழ்த்தியது பாரதம்.

அட தங்கள் காந்தியை மிஞ்சப்போகிறானே என்று கிஞ்சித்தும் அவர்களிடம் பயம் இல்லை. இவர்கள் காந்தி மீது உண்மையிலேயே பாசம் இல்லையா?. அல்லது எம்மை அழிப்பதென்றால் காந்தி என்ன கடவுளே வந்தாலும் தம்மை நிறுத்த முடியாது என்கிறார்களா?
புரியவில்லை.

2005ம் ஆண்டு நல்லூர் வீதியில் நானும் நண்பனும் திலீபனின் இறுதிநாள் நிகழ்வில். ஒலிவாங்கியில் ஒருவர் மிக மிக மிக உணர்வாக கதைக்கிறார். "நேரம் 10.40 இந்த நேரம் எல்லாம் திலீபன் துடிக்கிறான். மரணத்துடன் உச்சக்கட்டமாக போராடுகிறான். எமது திலீபன் எம்மை விட்டு பிரியும் நாளிகை நெருங்குகிறது. அன்பான மக்களே! உங்கள் திலீபன் பிரிந்த கணப்பொழுதில் நாம் நிக்கிறோம். பாரத தேசம் எங்கள் திலீபனை பறித்தெடுத்துவிட்டது. நேரம் 10.48. அன்பான மக்களே! திலீபன் எங்களை விட்டு பிரிகிறான். அவனை நினைத்து இரண்டு நிமிடம் மௌண அஞ்சலி செலுத்துவோம்" எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள். நிசப்தம். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. விழிகள் கசிந்து ஓரமாக ஓடுகிறது. நெஞ்சு எல்லாம் கனத்துப்போனது. தொண்டை அடைத்தது. வார்த்தைகளுக்குள் அமராத சோகம்.

மருத்துவர் சிவகுமாரே முதலில் திலீபன் எம்மை விட்டு சென்றான் என்பதை அறிந்தவர்.ஆனால் எவருக்கும் சொல்ல அவரால் முடியவில்லை. காலைத்தொட்டு எம் தெய்வத்தை வணங்கி குலுங்கி குலுங்கி அழுத போதே நல்லூர் அதிர்ந்தது. எங்கும் ஓஓஓ என்ற அழுகுரல். விம்மி நெஞ்சு வெடித்தது.

உனக்கு ஆங்கிலேயன் அந்நியன் என்றால் எமக்கு நீ அந்நியன்தான். நெஞ்சைப் பிழியும் நினைவு. மனதை உலுக்கும் நினைவு.


ஊரெழுவில் பூத்தகொடி வேரிழந்தது........... இது ஒரு அற்புதமான பாடல்.
பாடலை கேட்க............



கானொளிக்காட்சிகளாக திலீபன் நினைவு நாட்கள்.......


கானொளிக்காட்சிகளாக திலீபன் நினைவு நாட்கள்.......


சாவு தின்னுதே
சாவு தின்னுதே
தங்க மேனியை
சாவு தின்னுதே

வந்து பாரடா
வந்து பாரடா
நொந்த மேனியை
வந்து பாரடா.

குரல் எடுத்ததோர் குயில் படுத்தது
குமுறி நின்றதோர் புயல் பட்டுத்தது
தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது

அரிசி கொண்டொரு படகு வந்தது
அடுத்தது ஒரு செஞ்சிலுவை வந்ததது
வரிசை வரிசையாய் கவச வாகனம்
வந்து வாய்க்கரிசி போட்டு நின்றுது
- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஐயா திலீபா!
எங்கையா போகின்றாய்...? என்ற காசி ஆனந்தனின் கவிதையும்,

திலீபன் அழைத்தது சாவையா - இந்த
சின்ன வயதில் அது தேவையா
உலகம் இதை எண்ணிப்பார்க்குமா - இங்கு
ஒரு தமிழீழம் பூக்குமா?
- என்ற கவிதையும் (இது பின்னர் பாடலாக்கப்பட்டது)

இப்பொழுதும் நினைவில் உள்ளது.

விழியில் சொரியும் அருவிகள்
வேலவன் வீதியை நனைத்த துளிகள்
காலம் எம்மை கடந்து சென்றாலும்
காயாமல் இருக்கும் என்றும் ஈரமாய்.......!

தியாகி திலீபனுக்கு வீரவணக்கங்கள்.

Wednesday, September 17, 2008

சத்திய வேள்வி - 1987


"நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்
நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை"

இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தியாகவேள்வி அது. அந்த வேள்வியிலே தன்னையே தீயாக்கியும் தன்னையே ஆகுதியாக்கியும் ஈழத்தமிழர் இடர் இன்றி வாழ சாகத்துணிந்த அண்ணன் திலீபன், பன்னிரு நாள் வேள்வியிலே அணுஅணுவாய் தன்னை மாய்த்து மக்கள் மனங்களில் மறையாத மாவீரன் ஆனான்.

நினைவு நாளின் நான்காம் நாள் இன்று. நல்லை நகர் வீதியில் முன்பெல்லாம் நினைவு நாட்களின் போது அடையாள உண்ணாவிரதம் நடக்கும். பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் மூன்று தடவைகள் சென்றிருக்கிறேன். மேடையில் கவிதைகள், பேச்சுகள், நாட்டிய நாடகங்கள் நடக்கும். உச்சக்கட்டமாக திலீபனை எமைக்காத்த இறைவனாக வரிந்து காவடிகள், பறவைக்காவடிகள் போன்றன வரும். மேடையிலே ஆடுவார்கள். மாலைநேரத்தில் தொலைக்காட்சியிலே திலீபன் சம்பந்தமானதும் போராட்டம் சம்பந்தமானதும் ஒளிப்படக்காட்சி இடம்பெறும். அற்புதமாகவும் மனதைப் பிசைவனவாகவும் இருக்கும். இறுதியாக பழரசம் தந்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்படும். அறியா வயசில் சென்றாலும் இன்னமும் மனதில் பதிந்துள்ளது.

திலீபன் யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன். படிக்கும் காலத்திலேயே அவன் படு கெட்டிக்காரன். இவனைப் பற்றி கலாவினோதன் சின்னமணி கே.என்.கணபதிப்பிள்ளை தன்னுடைய திலீபன் நினைவு வில்லிசையில் 1988ம் ஆண்டு சொன்னது இப்போதும் நினைவில் உள்ளது

சதுரங்க விளையாட்டுப்பிள்ளை - திலீபன்
சதுரங்க விளையாட்டுப்பிள்ளை - தெருவிலே
ஆமிக்கு ஒயாத தொல்லை.

தீராத விளையாட்டுப்பிள்ளை பாடலை தன்னுடைய வில்லிசைக்கு ஏற்றாற்போல மாற்றிப்பாடினார்.

திலீபனைப்பற்றி அறிந்தவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். மெலிந்த தேகம் கொண்டவர். வல்லவர். மிகவும் சாதரணமாக எல்லோருடனும் சிரித்தமுகத்துடன் பழகுவாராம். அதுதான் அந்த சிரித்த முகத்தை இப்பொழுதும் காணலாம் யாழ்.மருத்துவ பீட வளாகத்தில் அவரது உயிரற்ற உடலில். இறந்தபின்னும் வாழ்வதென்பது இதுதானோ. வாழும் போதும் தமிழ் மக்களுக்காய். பின்னர் மாவீரனாகி மக்கள் மனங்களில் வாழும் போது மாணவர்களுக்காய் வாழ்கிறானே. இதுவரை இப்படி ஒரு உயிர், உடல் கொடையாளியை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை.

மிகச்சிறந்த பேச்சாளன். அவனது வெள்ளை உடையுடனான ஒரு நினைவுத்தாள் முன்பெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும். அதிலே அவன் கோட்டையை நோக்கி கையை நீட்டியவாறு ஒலிவாங்கி முன்னாலே பேசுவது போல இருக்கும். ஆம் " இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ, அன்றுதான் எமக்கு விடிவு. அன்றுதான் எமக்கு சுதந்திரம்" என்று பேசிய அந்தக் காந்தக்குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளின் பின்னர் 1990ல் திலீபனின் நீனைவு நாளான 26ந் திகதி அந்தக்கோட்டை விடுதலைப்புலிகள் வசம் வீழ்ந்தது.

அவனை பாரதம் புதைக்க அவனுக்காக அமைத்த நினைவுத்தூபியை சிங்களம் நொருக்கியது. மனிதம் ஈழத்தில் செத்துவிட்டது. இப்போது திலீபனின் உண்ணாவிரத மேடை அமைந்த பகுதியில் ஒரு சிறிய கருங்கல்லால் ஆன நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர்க்கந்தன் ஆலய அறங்காவலரின் அனுமதி இதற்கு கிடைத்தது பெரிய மகிழ்ச்சியே.

திலிபன் நினவுப்பாடல். வாணிஜெயராம் பாடியது. இதோ......



அட புன்முறுவல் பூத்த பூமுகத்தை கருக்கி விட்டார்களே. அமைதி என்று வந்து அராஜகம் புரிந்த அந்நிய தேசம் எம்வீரமகனை உருக்குலைத்துவிட்டதே. அதன் நினைவாக கிறுக்கியது இது.

=====================================================

ஓர் ஆறுமுகத்தானின் தேர் ஓடும் வீதியிலே
ஊர் முழுதும் புடைசூழ உத்தமனாம் பார்த்திபன்
வேர் அறுந்து வீழ்ந்ததுபோல் வீரமரணம் ஆகியது
பார் முழுதும் தமிழர்களை பரிதவிக்க விட்டதுவே!

வெள்ளைக் கொடி காட்டி விழுவாரை வரவேற்று- நாங்கள்
கள்ளுண்டது போல் களிப்பில் இருந்திட்ட போது
கொள்ளையில போவாரின் கோரத்தனத்தால் - எங்கள்
பிள்ளை திலீபன் எம்மை பிரிந்து போனானே!

காந்தியை தாங்கள் தந்த தேசமாம் - எங்கள்
சாந்தியை நாட்ட வந்த தேசமாம் - உங்கள்
காந்தியை கொன்றதும் உங்கள் தேசமே -எங்கள்
சாந்தியை கொன்றதும் உங்கள் தேசமே!


என்ன கேட்டோம் உன்னை
நீ இப்படிசெய்வதற்கு!
சொன்ன சொல்லை காத்த
திலீபன் எங்கே!
காந்தி வழி வந்த கயவர்
நீங்கள் எங்கே!
அகிம்சை என்றால் என்ன என்று
அறைந்து சொல்லியிருக்கிறோம்
இம்சை கொடுக்காமல் இனியேனும்
இறங்காமல் எட்டாவாயிரு!


ஒரு தலைவன் போனதற்காய் - நீங்கள்
பெரு ஓலம் இட்டு நின்றால் - எங்கள்
தரு ஆகிநின்ற தளப்திகளையும் - அவர்களோடு
கரு ஆகிநின்ற களப்போராளிகளையும் - இவர்களை
உரு ஆக்கிநின்ற எம் மக்களையும்
என்ன செய்தாய்?
வதைத்தாய்! வயிறோடு நின்றவளை
உதைத்தாய்! ருது ஆகாவிட்டாலும் அவளை
சிதைத்தாய்! உயிரோடு கொன்று
புதைத்தாய்! நடுவீதியில் எமை சுட்டு
நகைத்தாய்! எம் இரத்தம்
குடித்தாய்! தார் ஊற்றி எமை
எரித்தாய்!

முற்பகலில் எமக்கு இழப்பைத்தர
பிற்பகலில் உனக்கு இழப்பு.

ஒரு உயிர் போனதற்கு - உங்களுக்கு
ஒரு பத்தாயிரம் உயிர் என்றால் - எங்கள்
ஒரு பத்தாயிரம் உயிர் போனதற்கு - உங்கள்
ஒரு உயிர் போதும்தானே!

===================================================
இந்த இந்திய இராணுவக் கொடுமை பற்றிய பாடல்......




இந்த தூபி உடைத்துவீழ்த்தப்பட்டது 1995ல். பின்னர் மீண்டும் 2002ல் மறுசீராக்கம் செய்யப்பட்டது.
=====================================================================

நன்றி : தூயா