Thursday, November 27, 2008

மாவீரர் நாள் உரை - 2008 தமிழகத்திற்கு நன்றி



தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.


எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.


இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.


அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.


அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

நன்றி :தமிழ்வின்

கல்லறை கீதம்..!



அன்பான தமிழ் உறவுகளே!

தமிழர் இல்லாத நாடு இல்லை. தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை. இந்த கருவோடு தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் இணைந்து இந்த விடுதலைப்போரட்டத்தை வெல்ல வேண்டும். தமிழருக்கான தனிநாடு அமைக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்தோடு களமாடி அந்நிய தேசப்படைகளோடு போரிட்டு மடிந்து தாய் தமிழீழம் காத்த அந்த காவல் தெய்வங்களை வணங்கும் உச்சநேரம் நெருங்குகிறது.

தேசியத்தலைவர் அவர்களின் உரை நிகழும். அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி எழுப்பப்படும். ஏக காலத்தில் எல்லா ஆலயங்களிலும் இந்த நினைவொலி எழுப்பப்படும்.

அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்படும். மனதாலே அந்த மாவீரக் கண்மணிகளுக்கு வணக்கம். இது மௌன அஞ்சலி.

பின்னர் துயிலும் இல்ல பிரதான நினைவுச்சுடரை தளபதி ஒருவர் ஏற்ற ஏனைய கல்லறைகளுக்கான நினைவுச்சுடரை அந்தந்த மாவிரரின் பெற்றோர் ஏற்றுவோர். அல்லது உறவினர் அல்லது நண்பர்கள் ஏற்றுவார்கள். இந்த நேரத்தில் அங்கே கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அங்கே ஒலிபரப்பாகும். அது காற்றினில் தவழும் நேரத்தில் நெஞ்சங்கள் எல்லாம் விம்மும்.

இந்த கல்லறை கீதமாகிய துயிலுமில்லப்பாடல் அந்த பிரத்தியேக இடம் தவிர வேறு எங்கும் ஒலிபரப்பப்படமாட்டாது. யாரும் அதனை ஒலிபரப்பவும் விரும்புவதில்லை. அந்தளவிற்கு மக்கள் அதற்கு மரியாதை கொடுக்கிறார்கள்.

ஏராளமான மக்கள் அந்த துயிலுமில்லப்பாடலை கேட்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அவர்களுக்காக இங்கே......!


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!

சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!



எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!



உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!

எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


அன்பார்ந்த மக்களே! நாமும் அந்த மாவீரச்செல்வங்களை நினைந்து உருகி எமது வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

Wednesday, November 26, 2008

வருடத்தில் ஒருநாள் வந்துவிட்டுப்போ..!

ஈழ மண்ணின் விடுதலை வேண்டி தம்முயிரை துச்சமென மதித்தி விடுதலைத்தீயில் தம்மை ஆகுதியாக்கி உறங்காத கண்மணிகளாய் கல்லறைகளில் உறங்கும் மாவீரச்செல்வங்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

இன்றைய தினத்தை முன்னிட்டு 2006ம் ஆண்டு எழுதிய கவிதை ஒன்று மீண்டும் இதே பதிவில் இடம் பெறுகிறது.

மங்கும் மாலையென
மயங்கி இருந்து விடாதே!
கார்த்திகை குளிரென
கம்பளிக்குள் சுருண்டு விடாதே!
பொங்கும் உணர்வோடு
புறப்பட்டு வா!
நெய் விளக்கு ஏற்ற வேண்டாம்!
நெடு நேரம் நிற்க வேண்டாம்!
அரைமணி நேரம் வந்து
அமைதியாய் இருந்து விட்டுப்போ.....!
போகும்போது பார் தேகமெல்லாம
புல்லரித்து போய்விடும்.
வந்து பார்!
கல்லறைகளுக்கு முன்னால்
கண்மணிகளைப் பெற்றோர்,
கண்ணீரால் கழுவியபடி...
மலர் தூவி மாலை சூடி
மாணிக்கங்களை மனதார பூசிப்பர்.
அன்புச்செல்வங்களை ஆரத்தழுவுவர்.
மற்றவர்க்காய் மடிந்த மணி
இருந்தாலும்........
பத்து மாதம் சுமந்து பெற்ற
பிள்ளையடா........
பிரிவுத்துயர் இராதா ?
உற்றார் உறவினர்
நண்பர் எல்லாம் - அந்த
உயர் நாழிகைக்காய் காத்திருப்பர்.
தலைவன் உரை கேட்க
தரணியே தவமிருக்கும்.
உரை முடிந்ததும் உணர்வுகள் பொங்கும்.
உள்ளங்கள் குமுறும்.
மணியொலி கேட்கும் - அதை
விம்மல்கள் அடக்கும்.
கல்லறை கீதம் காற்றினில் தவழும்.
கல் நெஞ்சனையும் அது கசிய வைக்கும்.
கணப்பொழுதில் நெஞ்சம்
கனத்துப் போய்விடும்.
நெய் விளக்கு நெடிகள்
நெஞ்சை நெகிழச் செய்யும்.
விம்மும் குரல்கள் கேட்டு
நெஞ்சம் வெடித்திருக்கும்.
கல்லறைகளுக்கருகே தென்னங்கன்றுகள்!
இது கல்லறைகள் அல்ல கருவறைகள்.
இவர்கள்
புதைக்கப்பட்டவர்கள் அல்ல விதைக்கப்பட்டவர்கள்.
விதைத்ததுகள் நாளை விருட்சமாகும்.
அவையெல்லாம்
விடுதலையை விரைவுபடுத்தும்.
புண்ணிய வீரர் எண்ணியதை - நாளை
புலிச்சேனை முடித்து வைக்கும் - என்ற
திண்ணிய நெஞ்சுடன் எம் தலைவன்
திறம்படச் செய்வான்.
இந்த எண்ணத்துடன் வீடேகுவர்
மற்றோர் மற்றும் மாவீரரைப் பெற்றோர்.
விரலிடுக்கில் தென்னம்பிள்ளைகள்.
அதுவும் விடுதலைக்காற்றை எம்மோடு
நாளை சுவாசிக்கும்.
எதற்கும் நீயொரு தடவை
வந்து பார்!.

நவம்பர் 27ந் திகதி மாவீரர் தினத்தன்று
மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வின்
நினைவாக வரைந்தது

Tuesday, November 25, 2008

தலைவன் பிறந்தான்! தமிழர் நிமிர்ந்தோம்!!



இன்று 54வது அகவையை நிறைவு செய்யும் தமிழீழத் தேசியத்தலைவருக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தீயில் எரியும் தேசம் கண்டு
திமிறி எழுந்து திண்ணிய நெஞ்சனே
பாயில் படுத்து நீ பரவசம் கண்டிருந்தால்
பசுந்தமிழ் ஈழம் பார்த்திருப்போமா?

கோயில் கொண்டு உன்னை கும்பிடவேணும்
கோமகனே உன்னைப் போற்றிட வேணும்.

வரலாறு தந்த
வல்லமை நீ!
புறநானூறு தோற்ற
புதுமை நீ!
வாழ்விழந்த தமிழரின்
வழிகாட்டி நீ!

இன்று தமிழீழத்தேசிய தலைவரின் 54வது பிறந்த தினம். முகமிழந்த தமிழரின் முகவரியாக இருப்பவர் எங்கள் தலைவர். இந்த விடுதலைப்போரை செப்பமாக நடாத்தி முப்படைகளையும் கொண்ட ஒரு நவீன இராணுவத்தை அமைத்து விடுதலைப் போருக்கு புதிய பரிமானம் கொடுத்தவர்.

எத்தனையோ வலிகள்,எத்தனையோ இழப்புகள், எத்தனையோ துரோகங்கள் எல்லாவற்றையும் தாங்கி இன்றும் வீறு கொண்டு எழும் இனமாக வைத்திருக்கும் தலைவனின் மகோன்னதமான தலைமைப்பண்பு அதி உன்னதமானது.

"இழப்புகள் எமக்கு புதியவையுமல்ல. அவற்றை சந்திப்பது இதுதான் முதல் தடவையுமல்ல" இந்த காலத்திற்கு ஏற்ற உனது சிந்தனை இது. சூரியத்தேவன் உனது சூறாவளீ அடிக்கும். அது புது வரலாறு படைக்கும். உன்மேல் நாம்கொண்ட நம்பிக்கை எள்ளளவும் குறையவுமில்லை. குறையப்போவதும் இல்லை.

உன் விரல் நீளும் திசையில் விடுதலை வேங்கைகள் பாயும். வெற்றி நிச்சயம். அந்த நாளிகைக்காக காத்திருக்கிறோம்.

"உன்னை வாழ்த்த
வயதில்லை
உன்னை சார்ந்தோரை
பின்னாளில் போற்ற
அருகதை இல்லை..."

என்ற நண்பனின் வரிகள் என்னையும் சஞ்சலப்படுத்துகிறது. இடர்சூழந்த இந்நேரத்தில் இங்கிருந்து நாம் எதனையும் எழுதலாம்.

நீங்கள் விடுதலைத் தீயில் குதித்து உங்களை ஆகுதியாக்கி மூட்டும் கனென்ற விடுதலை நெருப்பில் நாங்கள் குளிர் காய்கிறோம்.

ஆனால் எமது மூச்சு, பேச்சு எல்லாமே உனதும், உனது போராளிகளினதும், உனைத்தாங்கும் அந்த வன்னி மக்களின் நினைவுதாம். காலம் விரியும். வெற்றி பரவும். எமது சுதந்திரக் காற்று எமைத்தழுவும்.

தலைவனை வாழ்த்திய இனிமையான பாடல்....!
"பொங்கிடும் கடற்கரை ஓரத்தில்.....!"


ஒரு தலைவனின் வரவிற்கு காத்திருந்தோம். அவன் பிறந்தான். தமிழன் நிமிர்ந்தான்.
முகமிழந்த்த எமக்கு முகவரியானான்.

Monday, November 24, 2008

கல்லறைகளுடன் ஒரு நாள்!

காவல் தெய்வங்களின் கோவில்
உறங்கும் தெய்வங்கள்
அது 2002ம் ஆண்டு மாவீரர் நாளின் முதல்நாள். 26ந் திகதி. நாம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்கிறோம். அன்று அங்கு ஒரு சில அலுவலகப் பணிகளுக்காகச் சிலர் அழைக்கப்பட்டோம். அந்த வருடம்தான் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புனரமைக்கப்பட்டது. ஏன்? நிறையப்பேருக்கு தெரியும். நிறையப்பேருக்கு தெரியாது. ஆம். 1995ம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா இராணுவம் யாழ்.குடாநாட்டை கைப்பற்ற, மக்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற மிலேச்சத்தனமான இராணுவம் கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை 'புல்டோசர்' போட்டு இடித்து தரைமட்டமாக்கியது. இந்த குரூர செயலை உலகத்தில் உள்ள வேறு எந்த இராணுவமும் செய்யாது.
இடித்து உடைக்கப்பட்ட கல்லறைகளின் துகள்கள்!

பின்னர் அந்த மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் இருண்டகாலத்தின் பின் முதற்தடவையாக நடைபெற்ற மாவீரர் நாள். நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. 1995ம் ஆண்டுக்கு முன்னர் இந்த துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், போராளிகள் என அனைவரும் திரண்டனர்.

தமது செல்வங்களின் விதைகுழிகள் எங்கே என அவர்கள் தேடாமல் இருக்க நாம் வழிகாட்டினோம். அவர்களுக்கு தெரியும். தமது பிள்ளை எங்கே உறங்குகிறான் என. ஆனா அரக்க இராணுவம் எல்லாவற்றையும் அழித்ததால் மீண்டும் புனரமைக்கப்பட்டதால் அவர்களுக்கு சற்றே குழப்பம்.

கண்களில் நீர் சொரிய சொரிய தேடுவார்கள். விசும்பும் அவர்கள் குரல் கேட்டு நெஞ்சு வெடிக்கும். கல்லறையை கண்ட உடன் கட்டியணைத்து குமுறி அழுவார்கள். என்ன ஆறுதல் சொல்ல முடியும். தேசவிடுதலை, மாவீரர் என என்ன சொன்னாலும் பத்துமாதம் சுமந்த தாய்க்குதானே தெரியும் அதன் பிரிவு வலி. வார்த்தைகளால் வடிக்க முடியாத சோகம். ஒரு கல்லறையை நிலைத்து பார்த்தால் எமக்கு தொண்டை அடைக்கும். கண்களில் நீர் எட்டிப்பார்க்கும்.

பெற்றவர்கள் கல்லறைகளுக்கு மாலைகள் போடுவார்கள். பூக்கள் சொரிவார்கள். தம் மணியான செல்வங்களுக்கு உணவு கொண்டு வந்து படைப்பார்கள். சந்தணக்குச்சிகளை கொழுத்தி, மெழுகுதிரி, நெய்விளக்கு என்பவற்றை ஏற்றி வழிபடுவார்கள். கண்களில் இருந்து சொரியும் நீரைப் பார்த்து வருணதேவனும் பொறுக்காமல் மழையாய் பொழிந்து அழுவான். அது எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. குடும்பமாய் அமர்ந்து கண்ணீரால் அர்ச்சிப்பார்கள்.


அடுத்தநாள்(27ந் திகதி) தான் மாவீரர் தினம் என்றாலும் முதல்நாளே அவர்களின் அஞ்சலிகள் தொடங்கிவிடும். காலையில் இருந்து மாலைவரை மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாது கல்லறைகளுக்கு அருகே இருப்பார்கள்.

வீடு திரும்பும் போது அவர்கள் முகத்தில் சோகம் இழையோடும். எவருடனும் கதைக்க மாட்டார்கள். நெஞ்சு முழுவதும் கண்மணிகளின் கனத்த நினைவு.

சிறிய குழந்தைகள் கூட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும். மிகவும் மனதைப்பிழியும் நினைவு அது. தமது பிள்ளைகளின் கல்லறை அங்கே இல்லை என்றவுடன் அவர்கள் படும்பாடு சொல்ல முடியாது. குழறி குழறி அழுவார்கள். மீண்டும் புனரமைக்கப்பட்ட துயிலும் இல்லம் என்பதால் அந்த தினத்துக்குள் முழுக்கல்லறைகளும் மீண்டும் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அன்று கல்லறைகள் இல்லாத பெற்றோர்கள் மண்களில் வீழ்ந்து புரண்டு அழுதனர். எவராலும் அவர்களை தேற்றமுடியவில்லை. அப்படியான் பெற்றோர்களுக்கு தூயிலும் இல்ல பொறுப்பாளரால் 27ந் திகதி 'நினைவுச்சுடர்' ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.

இவற்றைத்தவிர அங்கே தொண்டர்களாலும் போராளிகளாலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தென்னங்கன்றுகள் ஒவ்வொரு கல்லறைக்கும் அருகே வைக்கப்பட்டன. மிக மிக அற்புதமான முயற்சி. மாவீரர் நாள் முடிவுற்றதும் அவர்கள் வீடு செல்லும் போது தென்னங்கன்றுகளை தம்மோடு எடுத்து சென்று அந்த பிள்ளையின் நினைவாக தமது வளவிலே நாட்டுவார்கள். அந்த தென்னம்பிள்ளையை தமது பிள்ளையாக பாவனை செய்து வளர்ர்ப்பார்கள். கல்லறைகளுக்கு முன்னாலே சுடர் ஏற்றுவதற்காக ஒரு கம்பியிலே சிறிய தாளியை பொருத்தி, அதற்குள்ளே தேங்காய் கொப்புறாக்கள், திரி, கற்பூரம், ஒரு நெருப்புபெட்டி என்பவற்றை பொலித்தீன் துனியாலே மூடி கட்டுவார்கள். இது ஒவ்வொரு கல்லறைகளுக்கு முன்னாலும் இருக்கும். கல்லறை இல்லாத பெற்றோர்களுக்கு இப்படியான சுடரை கல்லறைகள் அமையப் போகும் இடத்தில் வைப்பார்கள்.

துயிலும் இல்ல வளாகம் எங்கும் மின் விளக்குகள் வண்ண ஒளி வீசும். ஒலி பெருக்கிகளில் மாவீரர் நினைவு கானங்கள் காற்றினூடே கல்லறை தழுவும் கானமாய் இதய்த்தை வருடும்.

அன்றைய தினம் தலைவனின் பிறந்த தினம் காலையில் உற்சாகமாக இருந்தவர்கள் எல்லாம், துயிலும் இல்லம் வந்த உடன் இறுக்கமாகி போவார்கள். கல்நெஞ்சனையும் கசியவைக்கும் அற்புதமான இடம். கண்ணீரால் நனைந்து நனைந்து துயிலும் இல்லம் எப்பொழுதும் ஈரலிப்பாகவெ இருக்கிறது போன்ற ஒரு பிரமை.

நாளை மாவீரர் நாள். தலைவன் உரை. உச்ச நாளிகை என மாலை நேரம் நம் மனதைப் பிழியப்போகிறது. இந்த எண்ணத்துடன் எல்லோரும் வீடு திரும்பினர்.

மாவீரர் வாரத்தில் இசைப்பிரியன் இசையில் உருவான ஒரு பாடல் இங்கே.


மிக அற்புதமான இசையமைப்பாளர் இசைப்பிரியன். இந்தப்பாடல் "கல்லறை தழுவும் கானங்கள்" என்ற ஒலிப்பேழையில் இடம்பெற்றது. எஸ்.ஜி.சாந்தன் மற்றும் வசீகரன் ஆகியோரின் குரலில் அற்புதமாக அமைந்த பாடல். இந்தப்பாடல் மட்டுமல்ல இந்த ஒலிப்பேழையில் வரும் எல்லாப்பாடல்களும் அற்புதமானவை. காலநீரோட்டத்தில் அவைகள் இந்த வலைப்பூவினூடே உங்களை தழுவும்.

இந்தப்பாடல் வரிகள் காசி ஆனந்தனுக்கு சொந்தம். குரல் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு சொந்தம். அற்புதமான பாடல். மகோன்னதமான வரிகள்.


காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை
கல்லறை அல்ல
உயிர் உள்ளவர் பாசறை
-காலத்தால்....

தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை
தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை
-தீபங்கள்....
-காலத்தால்....

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டைஉள் நுழையுமுன்
நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன்
-குண்டுமழை....
-காலத்தால்....

இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர்
இளவேனில் நாளில் உதிர்ந்தார்
தலை தந்து தமிழீழ மண் வாழ
விலை தந்து மாவீரராய் நிமிர்ந்தார்
-இலையுதிர்....
-காலத்தால்....

மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா
-மாற்றார்....
-காலத்தால்....

தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்
-தமிழீழ....
-காலத்தால்....

Wednesday, November 19, 2008

மாவீரர் வாரம்






கார்த்திகை என்றதும் ஈழத்தமிழர் நினைவெல்லாம் மாவீரர்கள்தான் நிற்பார்கள். ஈழவிடுதலைக்கு தமது உயிர்களை துச்சமென மதித்து அந்நியப்படைகளோடு போராடி மரணித்த புனிதர்களை நினைவு கூறும் வாரம். இது 1991ம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமாகி இன்றுவரை நடைபெறுகிறது.


இந்த மாவீரர் வாரம் ஆரம்பத்தில் கார்த்திகை 21 தொடக்கம் 27 வரை நடைபெற்றது. பின்னர் காலத்தின் நிலைகருதி 3நாட்களாக குறைத்து இப்போது 25 முதல் 27 வரை கொண்டாடப்படுகிறது. இது தமிழீழ தேசமெங்கும் உத்தியோக பூர்வமாக இருந்தாலும் இன்றும் மாவீரர் வாரம் என்ற சொற்பதம் பாவிக்கப்படுகிறது.


முதல் மாவீரன் லெப்ரினண்ட் சங்கர் மரணித்த கார்த்திகை 27ந் திகதியை மாவீரர் நாளாக கொண்டு இந்த வீரமறவர்களின் நினைவு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீதியெங்கனும் சிவப்பு மஞ்சள் கொடிகள் அழகாக பறக்கும். மாவீரர் வாரம் என்ற பதாகைகள் தொங்கும். முக்கிய இடங்களில் வீதியின் குறுக்கே மாவீரரின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் அழகிய வளைவுகள் கட்டப்படும். எல்லா இடங்களிலும் மாவீரர் நினைவுப்பாடல்கள் ஒலிக்கும்.



மாவீரர் வாரத்தையொட்டி வீதிகள் சுத்தமாக்கப்படும். நினைவுப்போட்டிகள் நடாத்தப்படும். எங்கும் எதிலும் மாவீரர் நினைவுதான்.


இந்த மாவீரர் வாரங்களில் மாவீரர்களின் நினைவுப்பாடல்களில் சிலவற்றை இங்கே கேட்கலாம்.



இந்தப் பாடல் ஒரு பாலஸ்தீனக்கவிதை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மைத்தன்மை பற்றி தெரியாது. எப்பொழுதும் மனதை உருக்கும் ஒரு பாடல்.
இதோ வரிகள்..! பாடலை பாடிய குரலும் மெட்டமைத்த கரங்கள் யாருக்கு சொந்தம் என தெரியவில்லை.

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

======================================